ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமியை இன்று காலை மும்பை போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றே கைது செய்தனர்.
இதனையடுத்து கடும் சர்ச்சைகள் மூண்டுள்ளது, அவர் தன்னை வீட்டில் போலீசார் தாக்கியதாகவும் தன் குடும்பத்தினரைத் தாக்கியதாகவும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆளும் பாஜக தரப்பில் அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவர் 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதற்கு இவர்தான் காரணம் என்று தற்கொலை செய்து கொண்டவரின் மகள் அளித்த புகார்களை அடுத்து அர்னாப் கைது செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன் கண்டனங்களை தெரிவிக்கும் போது, “பத்திரிகைச் சுதந்திரம் பற்றி பேசுபவர்கள் இன்று அர்னாப் கைதுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும். அப்படி நிற்கவில்லை எனில் நீங்கள் தந்திரோபாயமாக பாசிசத்தை ஆதரிப்பவர்களே.
உங்களுக்கு அர்னாபை பிடிக்காமல் இருக்கலாம், அவரை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம், அவரது இருப்பையே நீங்கள் அருவருப்பாக உணரலாம் ஆனால் அமைதி காத்தீர்கள் என்றால் அடக்கு முறைக்குத் துணை போகிறீர்கள் என்றே அர்த்தம்.
உங்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அடுத்து நீங்களாக இருந்தால் உங்களுக்காக யார் பேசுவார்கள்?” என்று ஸ்மிருதி இரானி ஆவேசமாகப் பேசியுள்ளார்.