இந்தியா

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை; கரோனாவை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது: பிரகலாத் சிங் பெருமிதம்

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் வலுவான தலைமை காரணமாக கரோனா பெருந்தொற்றை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டதாக மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீல் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சர்களும், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரகலாத் சிங் படேல், கோவிட் 19 காரணமாக அனைத்து துறைகளின் பொருளாதார செயல்பாடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

குறிப்பாக சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவும் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், எனினும், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் வலுவான தலைமை காரணமாக பெருந்தொற்றை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய பாட்டீல், அந்நிய செலவாணி வருவாய் ஈட்டித் தருவதில் முக்கியமான துறையாக இருப்பதால் வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி என இரண்டு பிரிவுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியமான பங்களிப்பை சுற்றுலாத்துறை வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா வணிகம் உயிர் பெறவும், ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புத்துயிர் பெறவும் இந்திய அரசு பல்வேறு பொருளாதார ஊக்க தொகுப்புகளையும், பல்வேறு நிதி மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா வணிகத்துக்கு ஆதரவு தர மாநில அரசுகளும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.

SCROLL FOR NEXT