ஜம்மு காஷ்மீரின் பிடிபி கட்சித் தலைவர் மெஹ்பூபா முப்தி வெள்ளிக்கிழமையன்று கூறும்போது, ஜம்மு காஷ்மீரின் கொடி மீண்டும் கொண்டு வரப்பட்டால் தேசியக் கொடியை உயர்த்துவோம் என்று கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
என் கொடி இதுதான் (மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் கொடியைக் காட்டி). இந்தக் கொடி மீண்டும் கொண்டு வரப்பட்டால், மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்.
எங்கள் கொடியை மீண்டும் கொண்டு வராமல் வேறு எந்த கொடியையும் உயர்த்தப் போவதில்லை. இந்தக் கொடிதான் மூவர்ணக்கொடியுடனான உறவை வளர்த்தெடுத்தது.
இந்த நாட்டின் மூவர்ணக்கொடியுடனான எங்கள் உறவு ஜம்மு காஷ்மீர் கொடியைத் தவிர்த்துக் கிடையாது. இந்தக் கொடி எங்கள் கைக்கு கிடைக்கும் போது அந்தக் கொடியையும் உயர்த்துவோம்.
நான் போராட்டக்குணம் உடையவள். எனக்குத் தேர்தல்களில் ஆர்வம் இல்லை. எங்கள் சிறப்பு அந்தஸ்து மீண்டும் எங்களுக்கு கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசியல் சட்டம் 370-ஐ மீட்பதல்ல என் போராட்டம், காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்தே என் போராட்டம்.
சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான் எங்களுக்கு இணக்கம். இன்றைய இந்தியாவுடன் நாங்கள் சவுகரியமாக இல்லை, என்றார்.