மத்திய பிரதேச பாஜகவைச் சேர்ந்த பெண் அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்தியபிரதேசத்தில் உள்ள தாப்ரா தொகுதிக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவி குறித்து கமல்நாத் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து கமல்நாத்தின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், கட்சிப் பொறுப்புகளில் இருந்து கமல்நாத்தை நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடிதம் எழுதி உள்ளார். இதனிடையே, இந்த விவகாரத்தில் 48 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையம் கமல்நாத்துக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.