இந்தியா

எஸ்பிபி உயிரிழப்புக்கு சீனாவே காரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சீனிவாச ராவ். உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகர் ஆவார். இந்நிலையில் சீனிவாச ராவ் சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து சீனிவாச ராவ் கூறும்போது, "கடந்த 8 மாதங்களாக கரோனா வைரஸ் தொற்றால் நம் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. கரோனா வைரஸை உருவாக்கி பல நாடுகளுக்கு பரவச் செய்தது சீனாதான் என பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், இதுகுறித்து சீனா இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளை பொருளாதார ரீதியாக வலுவிழக்கச் செய்ய வேண்டுமெனும் எண்ணம் சீனாவிற்கு உள்ளது. ஆதலால்தான் கண்ணுக்கு புலப்படாத நுண் உயிர் கொல்லியை உலகம் முழுவதும் சீனா பரவச் செய்துள்ளது. இதனால்தான் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். எனவே சீனா மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT