உத்தரப்பிரதேசம், ஹாத்தரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக வழக்கின் விசாரணையை அலாகாபாத் உயர் நீதிமன்றமே கண்காணிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரப்பிரதேசத்தில் வழக்கின் விசாரணை நடந்தால் நியாயமாக நடைபெறாது, விசாரணை தவறான கோணத்தில் செல்லவாய்ப்புள்ளது என மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்டது.
ஆனால் அதற்கு உச்ச நீதிமன்றம் “ அலகாபாத் உயர் நீதிமன்றமே விசாரணையை கண்காணிக்கும். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நாங்கள் இங்குதானே இருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்ரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டுவந்த போலீஸார் தகனம் செய்தனர்.
இந்த வழக்கை சிபிஐ மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும், சாட்சியங்களையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டும், விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்படே, நீதிபதிகள் ஏஎஸ் போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. உ.பி. அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார், உ.பி.போலீஸ் டிஜிபி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், சித்தார்த் லூத்ரா ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், விவரங்கள், குடும்ப விவரங்கள் வெளியே வரக்கூடாது. அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முழுப்பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் “ உத்தரப்பிரதேசத்தில் வழக்கின் விசாரணை நடந்தால் நியாயமாக இருக்காது. வேறு மாநிலத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் அல்லது டெல்லியில் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் குறுக்கிட்டு, “ மாநிலத்தில் விசாரணை நடந்தால் நியாயமாக நடக்காது என்ற கவலை இருக்கிறது. சாட்சியங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இருக்காது “ எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த துஷார் மேத்தா, “ பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு குறித்தும், சாட்சியங்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்தும் உ.பி. பிராமாணப்பத்திரம் தாக்கல் செய்துவிட்டது. விசாரணையையும் சிபிஐக்கு மாற்றிவிட்டது.
அந்த விசாரணையையும் உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசும் கோரியுள்ளது. தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வழக்கறிஞர் ஏற்பாடு செய்யவும் உதவி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிசாரணையில் மாநில அரசு எந்த பாகுபாடும் பார்க்காது ” எனத் தெரிவித்தார்.
போலீஸ் டிஜிபி சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே “ தேவைப்பட்டால் சாட்சியங்களுக்கும், குடும்பத்தினருக்கும் சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கவும் தயாராக இருக்கிறோம். நீதிபதி கூறும் உத்தரவுக்கு ஏற்றார்போல் பாதுகாப்பு அளிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் சீமா குஷ்வாலா , “ வழக்கின் விசாரணையை டெல்லிக்கு மாற்றிட வேண்டும். சிபிஐ தனது விசாரணயை அறிக்கையை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதற்கு துஷார் மேத்தா, “ மாநில அரசு ஏற்கெனவே கூறிவிட்டது. எந்த அமைப்பு விசாரணையை நடத்தினாலும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயார். எந்த காரணத்தைக்கொண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியே வராது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து தலைைம நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பிறப்பித்த உத்தரவில், “ ஹாத்ரஸ் வழக்கு விசாரணை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பிலேயே நடைபெறும். எந்த விதமானப்பிரச்சனை ஏற்பட்டாலும் நாங்கள் இங்குதானே இருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.