பா.ஜ.க கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெறும் என டைம்ஸ்நவ் - சிவோட்டர் நடத்திய தேர்தலுக்கு முந்தையக் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலச் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. முதல்கட்டத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி நடக்கிறது. முதல் கட்டத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது.
2-ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. 2-ம் கட்டத்தில் 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 3-ம் கட்டத் தேர்தல் 15 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பிஹாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா சமீபத்தில் வெளியேறியது.
இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திரா குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா தளமும் (ஆர்எல்எஸ்பி) வெளியேறி விட்டது. அதேபோல் பாஜக கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சியும் வெளியேறியுள்ளது.
பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுடன் அவாம் மோர்ச்சா போட்டியிடுகிறது. பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதிஷ் குமார் தலைமையில்தான் போட்டியிடும் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. எல்ஜேபி, நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிட மறுத்து விட்டது.
அதேபோல் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளது.
தேவேந்திர பிரசாத் யாதவின் சமாஜ்வாடி ஜனதாதளக் கட்சி, ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஆகியவை 3-வது அணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாஹா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் டைம்ஸ்நவ் - சிவோட்டர் நடத்திய தேர்தலுக்கு முந்தையக் கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், பா.ஜ.க 85 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 70 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாகவும், இரண்டாவது இடத்தை ஐக்கிய ஜனதாதளமும் கைபற்றறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டணியானது 76 தொகுதியில் வெற்றி பெறும் எனக்கூறப்பட்டுள்ளது. அதில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 56 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்ஜனசக்தி கட்சிக்கும் 5 இடங்கள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.