கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 70 லட்சத்தைக் கடந்தது; 13 நாட்களில் 10 லட்சம் பேருக்குத் தொற்று: குணமடைந்தோர் 86 சதவீதமாகஉயர்வு

பிடிஐ

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 70 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 13 நாட்களுக்கு முன் 60 லட்சத்தைத் தொட்ட நிலையில் நேற்று 70 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74 ஆயிரத்து 383 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 70 லட்சத்து 53 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்து 77 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 86.17 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 67 ஆயிரத்து 496 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12.30 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 918 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.54 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 8 கோடியே 68 லட்சத்து 77 ஆயிரத்து 242 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 78 ஆயிரத்து 544 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும் எட்டியது.
கரோனா தொற்று 10 லட்சத்திலிருந்து 20 லட்சத்தை எட்ட 21 நாட்கள் எடுத்துக்கொண்டது.

30 லட்சத்தை எட்ட 16 நாட்கள் தேவைப்பட்டது. 40 லட்சம் பாதிப்பைக் கடக்க 13 நாட்களும், 50 லட்சத்தைக் கடக்க 11 நாட்களும் தேவைப்பட்டன. 50 லட்சத்திலிருந்து 60 லட்சத்தை 12 நாட்களிலும், தற்போது 60 லட்சத்திலிருந்து 70 லட்சத்தை 13 நாட்களிலும் கடந்துள்ளது.

தொடக்கத்தில் ஒரு லட்சம் பாதிப்பை எட்ட 110 நாட்கள் எடுத்துக்கொண்ட நிலையில், 10 லட்சத்தை அடுத்த 59 நாட்களில் எட்டியது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT