பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

இந்தியாவில் கரோனா தொற்று 68 லட்சத்தைக் கடந்தது: குணமடைந்தோர் எண்ணிக்கை 58 லட்சமாக உயர்வு

பிடிஐ

இந்தியாவில் கரோனா தொற்று 68 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 58 லட்சமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78 ஆயிரத்து 524 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 68 லட்சத்து 35 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 58 லட்சத்து 27 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 85.25 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 2 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13.20 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 971 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.55 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 8 கோடியே 34 லட்சத்து 65 ஆயிரத்து 975 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 94 ஆயிரத்து 321மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும் எட்டியது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT