இந்தியா

காமத்தின் சின்னம் என்பதால் ஷாஜகான் சாலை பெயரை மாற்றுங்கள்: மோடிக்கு பாஜக மூத்த தலைவர் கடிதம்

பிடிஐ

'காமத்தின் சின்னம்' ஆகத் திகழும் முகலாய மன்னர் என்பதால், ஷாஜகான் சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியை டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அஸ்வினி உபாத்யாயா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஷாஜகான் சாலைக்கு தஸ்ரத் மாஞ்சியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், "'காமத்தின் சின்னம்' ஆக திகழும் முகலாய மன்னர் ஷாஜகானுக்குப் பதிலாக அன்பு, அர்ப்பணிப்பு, மன உறுதி, பக்தியின் சின்னமாகத் திகழும் தஷ்ரத் மாஞ்சியின் பெயரைச் சூட்ட வேண்டும்.

நம் நாட்டில் உள்ள இளைஞர்களின் உத்வேகத்துக்கு ஆதாரமாகவே மாஞ்சி திகழ்கிறார். அவரது மன உறுதியும் இலக்கை நோக்கிய அர்ப்பணிப்புப் பயணமும், முழுமையான போராட்ட வாழ்க்கையும் நம் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக விளங்குகிறது.

யுபிஎஸ்சி தலைமையகம் உள்ள ஷாஜகான் சாலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வலம் வருகிறார்கள். எனவே, அந்த சாலைக்கு மாஞ்சியின் பெயர் சூட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் அஸ்வினி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிஹாரின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த கஹலவுர் கிராமத்திலுள்ள மலையைத் தனியாளாகக் குடைந்து 360 அடி நீள பாதையை உருவாக்கியிருக்கியவர் தஷ்ரத் மாஞ்சி. 'மலை மனிதர்' என்று அழைக்கப்படும் இவரது பெயரையே புதுடெல்லியில் உள்ள முக்கிய சாலைகளுள் ஒன்றான ஷாஜகான் சாலைக்கு சூட்ட வேண்டும் என்று பாஜக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலைக்கு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது.

டெல்லி மாநகராட்சியால் ஆகஸ்ட் 28-ல் எடுக்கப்பட்ட இந்த முடிவு, நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT