ரெய்ஸ் 2020-இன் கூட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
செயற்கை நுண்ணறிவு பற்றிய ரெய்ஸ் 2020 சர்வதேச மெய்நிகர் மாநாட்டில் உலகெங்கிலுமிருந்து நிபுணர்கள் பங்கு கொண்டு தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டில் எம்ஐடி, கூகிள், ஐபிஎம் மற்றும் உலக பொருளாதார கூட்டமைப்பிலிருந்து புகழ்பெற்ற நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு குறித்த மாபெரும் மெய்நிகர் மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து 2020 இன்று முதல் 9 வரை நடத்துகின்றன.
இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தொடக்கி வைத்தார். சர்வதேச செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்துகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள எம்ஐடி-யின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தின் இயக்குநர் பேராசிரியர் டேனியலா ரூஸ், கூகிள் ரிசர்ச் இந்தியாவின் சமூக நலனுக்கான செயற்கை நுண்ணறிவு இயக்குநர் டாக்டர் மிலிந்த் தம்பே, ஐபிஎம் இந்தியா மற்றும் தெற்காசியாவின் நிர்வாக இயக்குநர் சந்திப் படேல் உள்ளிட்ட நிபுணர்கள் அக்டோபர் 7 அன்று மூன்றாம் நாள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
சமூக மாற்றம், உள்ளிணைப்பு மற்றும் சுகாதாரம், வேளாண்மை, கல்வி மற்றும் திறன்மிகு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு ஆகியவற்றுக்காக எவ்வாறு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தலாம் என்பது குறித்து இவர்கள் விவாதிக்கின்றனர்.