இந்தியா

ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி போலீஸில் சரண்

பிடிஐ

டெல்லி முன்னாள் சட்ட அமைச்சரும் ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான சோம்நாத் பாரதி டெல்லி போலீஸில் சரணடைந்தார்.

அவர் ஒருவேளை கைது செய்யப்பட்டால், கடந்த 4 மாதங்களில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களில் 4-வது நபராவார்.

சோம்நாத் பாரதிக்கு எதிராக அவரது மனைவி லிபிகா மித்ரா கடந்த ஜூன் 10-ம் தேதி டெல்லி துவாரகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சோம்நாத் பாரதி மீது குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தடுக்க முன்ஜாமீன் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்றுமுன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சுரேஷ் கெய்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 17-ம் தேதி வரை சோம்நாத் பாரதியை கைது செய்ய நீதிபதி தடை விதித்தார். அன்றைய தினம் டெல்லி போலீஸார் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்றிரவு (செவ்வாய் இரவு) ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்திய சோம்நாத் பாரதி இன்று (புதன்கிழமை) காலை போலீஸில் சரணடைந்துள்ளார்.

SCROLL FOR NEXT