இந்தியாவில் கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டனர், ஒட்டுமொத்த பாதிப்பு 64 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பும் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81 ஆயிரத்து 484 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்தபாதிப்பு 63 லட்சத்து 94 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்து 52 ஆயிரத்து 78 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 83.70 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 42 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14.74 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 1,095 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 99 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.56 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 7 கோடியே 67 லட்சத்து 17ஆயிரத்து 728 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 97 ஆயிரத்து 947 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 394 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 130 பேர், உத்தரப்பிரதேசத்தில் 80 பேர், தமிழகத்தில் 66 பேர், மேற்குவங்கத்தில் 59 பேர், பஞ்சாபில் 45பேர், ஆந்திராவில் 41 பேர், டெல்லியில் 40 பேர், சத்தீஸ்கர், கேரளாவில் தலா 29 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.