மேற்கு வங்கத்தில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகத் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் எனப் பலருக்கும் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல படங்கள் ஓடிடி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டு வருகின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.
திரையரங்குகளை விரைந்து திறக்குமாறு இந்திய மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. இதற்கான அறிக்கைகளை நாடு முழுவதுமுள்ள நாளிதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள், மேடை நாடக அரங்குகள் உள்ளிட்டவற்றைத் திறக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''இயல்பு நிலைக்குத் திரும்பும் நோக்கில், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள், நாடகங்கள், இசை, நடனம், மேஜிக் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை 50 அல்லது அதற்கும் குறைவான பார்வையாளர்களுடன் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இவற்றில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்''.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்புக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.