மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது, கலவரம் மூண்டதில் 54 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில், டெல்லி போலீஸார் 17,000 பக்க குற்றப்பத்திரிகையை கடந்த 17-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலத்தில் இடம்பெற்றிருந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
“டெல்லியில் தொடர் போராட்டம் நடந்த இடத்தில் உமர் காலித், சல்மான் குர்ஷித், நதீம் கான் உள்ளிட்டோர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினர்” என ஒரு சாட்சி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்ற தகவல் இடம்பெறவில்லை. சாட்சியின் அடையாளத்தையும் போலீஸார் ரகசியமாக வைத்துள்ளனர். அதேநேரம் வன்முறைக்கு சதித் திட்டம் தீட்டிய குழுவைச் சேர்ந்தவர்தான் அந்த சாட்சி என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சல்மான் குர்ஷித் போராட்டக் களத்தில் பேசினார் என இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரும் தெரிவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.