இந்தியாவில் கரோனா பாதிப்பு 56 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 83 ஆயிரத்து 347 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 56 லட்சத்து 46 ஆயிரத்து 10 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்குப் பின் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 75 ஆயிரமாக நேற்றுமுன்தினம் குறைந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது. இதில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்து 87 ஆயிரத்து 613 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 81.75 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 1,085 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 90 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.59 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 392 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 83 பேர், உத்தரப் பிரதேசத்தில் 77 பேர், மேற்கு வங்கத்தில் 62 பேர், தமிழகத்தில் 76 பேர், ஆந்திராவில் 51 பேர், பஞ்சாப்பில் 66 பேர், டெல்லியில் 37 பேர் உயிரிழந்தனர்.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 377 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17.15 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 6 கோடியே 62 லட்சத்து 79 ஆயிரத்து 462 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 53 ஆயிரத்து 683 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.