திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான நேற்று சிம்ம வாகனத்தில் உற்சவர் ஸ்ரீநிவாசர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு முத்துப் பல்லக்கு வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பர் காட்சி அளித்தார்.
திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமாட வீதிகளில் நடைபெறும் வாகன சேவைகளை தரிசித்து வருகின்றனர். இதில் 3-ம் நாளான நேற்று காலை, தங்க சிம்ம வாகனத்தில் உற்சவர் ‘ஞான முத்திரை’ யில் எழுந்தருளினார். பகவத் கீதையில், “மிருகங்களில் நான் சிங்கம்” என்று ஸ்ரீ கிருஷ்ணர் அருளியுள்ளார். அதன்படி உற்சவமூர்த்தி சிம்ம வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார். மாட வீதிகள் முழுவதும், பக்தர்களின் முழக்கம் விண்ணை எட்டியது. வாகன சேவையின் முன்பாக ஜீயர் குழுவினர், நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பாடிச் சென்றனர். இவர்களுக்கு முன், பல்வேறு மாநில நடனக் கலைஞர்கள் நாடனமாடிச் சென்றனர். மேலும் பரிவட்டங்கள் இதில் பங்கேற்றன.
முன்னதாக மாநில ஆளுநர் நரசிம்மன் தம்பதியர், சிம்ம வாகன உற்சவத்தில் பங்கேற்றனர். இவர்கள் ஏழுமலையானை தரிசித் தனர். இவர்களுடன் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணனும் சுவாமியை தரிசித்தார். இவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
இரவு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் முத்துப் பல்லக்கு வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.