வேளச்சேரி ஏரியைச் சீரமைக்கும் கவலை அதிமுக அரசிற்கு இல்லை என திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் இன்று நாடாளுமன்றத்தில் புகார் எழுப்பினார்.
இதுகுறித்து மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் தென்சென்னை தொகுதி எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:
''சதுப்பு நிலம் மற்றும் ஈர நிலம் ஆகியவை நாட்டின் மிகப் பெரிய பொக்கிஷங்கள் ஆகும். அவற்றைப் பாராமரிக்க வேண்டியது அவசியம். தென்சென்னை தொகுதிக்குட்பட்ட வேளச்சேரி ஏரியில் உள்ள சதுப்பு நிலப்பகுதி குப்பைக் கிடங்காக உள்ளது. இதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் அதிமுக அரசாங்கம் தமிழகத்தில் உள்ளது.
மெட்ரோ வாட்டர் நீரேற்று நிலையத்தில் இருந்து வெளியேறும் அதிகப்படியான கழிவுநீர், ராஜ்பவன் கால்வாயில் கலந்து வேளச்சேரி ஏரியில் வெளியேறுகிறது. இதுபற்றிப் பலமுறை சென்னை மாநகராட்சியிடம் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர், வேளச்சேரி ஏரியைச் சுற்றுச்சூழல் பாரம்பரியத் பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி, வேளச்சேரி ஏரியை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்''.
இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.