இந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 44 லட்சத்தை நெருங்குகிறது, மீண்டோர் 80 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுதாகாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 86 ஆயிரத்து 961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 54 லட்சத்து 87 ஆயிரத்து 580 ஆக அதிரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது.
ஆனால் இதில் ஆறுதல் தரும் விதத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை44 லட்சத்தை நெருங்குகிறது. கரோனாவிலிருந்து இதுவரை 43 லட்சத்து 96 ஆயிரத்து 399 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவிலிருந்து மீண்டோர் 80.12 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 299 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18.28 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 1,130 பேர் கரோனாவில் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 87,882 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.60 சதவீதமாக குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 6 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 594 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 7 லட்சத்து 31 ஆயிரத்து 534 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.