மாநிலங்களவையில் 3 விவசாய மசோதாக்களும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு கட்சி எம்.பி.க்களும் விவாதத்தில் பங்கேற்று பேசி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.
அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாக்களை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் பேசி வருகின்றனர்.
தற்போது 243 எம்.பி.க்கள் உள்ளனர். மசோதா நிறைவேற இவர்களில் 122 பேர் ஆதரவு தேவை. பாஜக கூட்டணிக்கு 105 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு 100 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது.
இதனிடையே மாநிலங்களவை எம்.பி.க்களில் 10 பேருக்கு கரோனா இருப்பதால் அவர்கள் அவைக்கு வருவதில் சிக்கல் உள்ளது. இவை மட்டுமல்லாமல் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 6 எம்.பி.க்களும், டிஆர்எஸ் கட்சிக்கு 7 எம்.பி.க்களும் பிஜூ ஜனதாதள கட்சிக்கு 9 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது. இதனால் 135 எம்.பி.க்கள் ஆதரவுடன் 3 மசோதாக்களும் நிறைவேறும் என பாஜக தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.