நிர்பயா நிதி மூலம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 24 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்கள் ரூ.1,919 கோடியைப் பயன்படுத்தியுள்ளன என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா பெயரில் இந்த நிதி உருவாக்கப்பட்டது. இந்த நிதி நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காக முற்றிலும் செலவிடப்படுகிறது.
நிர்பயா நிதி மாநிலங்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது, இதில் எவ்வளவு தொகையை மாநிலங்கள் செலவிட்டுள்ள என்ற கேள்விக்கு மக்களவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நிர்பயா நிதியிலிருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.3 ஆயிரத்து 24.46 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்கள் ரூ.1,919.11 கோடியைச் செலவிட்டுள்ளன.
அதிகபட்சமாக டெல்லி மாநிலத்துக்கு மட்டும் ரூ.409.03 கோடி விடுவிக்கப்பட்டது. அதில், ரூ.352.58 கோடி செலவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ.324.98 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், ரூ.216.75 கோடி செலவிட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.303.06 கோடி விடுவிக்கப்பட்டதில் ரூ.265.55 கோடி செலவிடப்பட்டுள்ளது”.
இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ஸ்மிருதி இரானி, “ பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை உரிய நேரத்தில் திறம்பட விசாரிப்பதற்காக பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்டும் 14,950 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2.97 கோடியாகும்.
இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 3,056 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தாற்போல், ராஜஸ்தான் மாநிலத்துக்கு 1,452 கருவிகளும், மத்தியப் பிரதேசத்துக்கு 1,187 கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.