இந்தியா

4 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக எல்ஐசியின் முதலீடு ரூ.33,000 கோடி –மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

ஆர்.ஷபிமுன்னா

கடந்த நான்கு ஆண்டுகளில் நெடுஞ்சாலை திட்டங்களுக்காக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான(எல்ஐசி) ரூ.33,000 கோடிகள் முதலீடு செய்துள்ளது. இந்த தகவலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

இது குறித்து இன்று மக்களவையில் தாக்கல் செய்த தனது எழுத்துபூர்வமானப் பதிலில் நிதி இணையமைச்சர் அனுராக் தாக்கூர்’ ‘இதற்கானத் தகவல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

இதன்படி 2016-17, 2017-18, 2018-19 ஆண்டுகளில் ரூ.25,000 கோடிகளை 30 ஆண்டுகளுக்கும், 2019-20 இல் ரூ.7,904 கோடிகளையும் எல்ஐசி நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

இம் முதலீடுகள் ’பாரத் மாலா’ மற்றும் பல நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கானவை என்றும் அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கேள்வி ஒன்றை மதுரை தொகுதியின் மார்க்சிஸ்டு கட்சி எம்.பியான சு.வெங்கடேசன் மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்பியிருந்தார்.

இதையடுத்து நிதி அமைச்சர் வெளியிட்ட பதிலின் மீது எம்.பியான சு.வெங்கடேசன் ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறும்போது, ‘இதன்மூலம், மத்திய அரசு அறிவித்த பாரத் மாலா பரியோஜனா திட்டத்திற்கான நிதியாதாரத் திரட்டலில் எல்ஐசி மிகப்பெரும் பங்கினைத் தருகிற நிறுவனம் என்றாகி உள்ளது.

இந்தியாவின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு எல்.ஐ.சி அளித்து வரும் அளப்பரிய பங்களிப்பிற்கு இது சாட்சியம். எல்ஐசி அரசின் இயல்பான ஏகபோகமாக, முழுமையான அரசு நிறுவனமாகத் திகழ வேண்டிய முக்கியத்துவத்தையும் இது உணர்த்துகிறது.

ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு அன்னிய முதலீடுகள், தனியார் முதலீடுகளே வழி வகுக்குமென்ற அரசின் நவீன தாராளமயப் பாதைக்கு எதிர் மாறான அனுபவத்தை எல்ஐசி தந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், எல்ஐசியின் பங்கு விற்பனையை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும், அந்நிறுவனம் முழுக்க, முழுக்க மத்திய அரசின் கைகளிலேயே நீடிக்க வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT