ஆந்திர மாநில இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் வெள்ளம்பல்லி ஸ்ரீநிவாஸ் நேற்றுதனது குடும்பத்தினருடன் திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்த தேவஸ்தான அதிகாரிகள், தரிசன ஏற்பாடுகள் செய்தனர். பின்னர், ரங்கநாயக மண்டபத்தில் அமைச்சருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
அதன் பின்னர் அமைச்சர் வெள்ளம்பல்லி ஸ்ரீநிவாஸ் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருமலையில் கரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள்அறிவித்த நிபந்தனைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுகின்றன. இதற்காக நான் தேவஸ்தான அதிகாரிகளை பாராட்டுகிறேன். விநாயகர் சதுர்த்தியை இம்முறை நாம் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தெருக்களில் விதவிதமான விநாயகர் சிலை வைத்து வழிபடுவோம். கரோனா தொற்று பரவலை தடுக்க இம்முறை தெருவில் வைக்கும் விநாயகர் சிலைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இதனையும் எதிர்க்கட்சியினர் அரசியலாக்குகின்றனர்" என்றார்.