குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி : கோப்புப்படம் 
இந்தியா

பிரணாப் முகர்ஜியின் உடல்நலத்தில் பின்னடைவு; நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்

பிடிஐ

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கடந்த சில நாட்களாக இருந்த நிலையிலிருந்து பின்னடைவு கண்டுள்ளது, அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி(வயது86) மூளையில் சிறிய கட்டி இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனால், கடந்த ஒரு வாரமாக பிரணாப் முகர்ஜியின் வெண்டிலேட்டர் உதவியுடனே சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் இருந்ததாக அவரின் மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

பிரணாப் முகர்ஜியின் மூளையில் இருந்த சிறிய கட்டி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டபின்பு அவர் கோமா நிலையில் இருந்து வருகிறார். அவருக்கு கரோனா பாஸிட்டிவ் என்ற நிலையே தொடர்கிறது.

இந்நிைலயில் மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை பின்னடைந்துள்ளது. அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து அவர் வென்டிலேட்டர் சிகிச்சையில்இருந்து வருகிறார். அவரின் உடல்நிலையை சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்ரில் பதிவிட்ட கருத்தில் “ உங்களின் பிரார்த்தனைகள், வாழ்த்துகள், மருத்துவர்களின் கடின முயற்சிகள் மூலம் என்னுடைய தந்தை உடல்நிலை சீராக இருக்கிறது. முக்கிய உறுப்புகள் சீராக இயகத்தில் இருக்கின்றன. முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தெரிகிறது. அனைவரும் எனது தந்தைத்காக பிரார்த்தனை செய்யுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT