சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட மருத்துவமனையில் மாவட்ட ரிசர்வ் படை (டிஆர்ஜி) வீரர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான பெஜி நோக்கி கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இஞ்சராம் என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. 2 மணி நேரத்துக்கும் மேலாக உடலுடன் உறவினர்கள் தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிஆர்பிஎப் வீரர்கள் அங்கு விரைந்து சென்று, இறந்த டிஆர்ஜி வீரரின் சவப்பெட்டியை தோளில் சுமந்து வந்தனர். இதில் நீரோட்டம் கொண்ட ஒரு ஆற்றை அவர்கள் கடந்துவந்த பிறகு, டிஆர்ஜி வீரின் உடல் அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உரிய நேரத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் செய்த இந்த உதவிக்கு இறந்த வீரரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். சிஆர்பிஎப் வீரர்களின் மனிதநேயத்தை பலரும் பாராட்டினர்.