இந்தியா

"சாதி" குறித்த பேச்சிற்காக லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குப் பதிவு

பிடிஐ

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை லாலு பிரசாத் யாதவ் ரகோபூர் தொகுதியிலிருந்து தொடங்கினார். அங்கு அவர் பேசும் போது பிஹார் தேர்தல் "பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும்", "உயர் சாதியினருக்கும்" இடையே நடக்கும் தேர்தல் என்று வர்ணித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரது இந்தப் பேச்சு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதாக தேர்தல் ஆணையம் கருதியதே வழக்குப் பதிவுக்குக் காரணம்.

வைஷாலி மாவட்டத்தில் உள்ள கங்கா பிரிட்ஜ் காவல் நிலையத்தில் முதல் தகவலறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எஸ்.பி.ராகேஷ் குமார் தெரிவித்தார்.

தனது மகன் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் தொகுதியில் லாலு பிரசாத் யாதவ், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல், பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும், உயர்சாதியினருக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்றும், யாதவ் பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் பாஜக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணியை முறியடிக்க ஒன்று திரள வேண்டும் என்று பேசியதாக தெரிகிறது.

ஞாயிறன்று அவர் பேசியதன் வீடியோ பதிவு ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.லஷ்மணன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT