இந்தியா

டெல்லி தமிழ் சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் பொட்டலங்கள் விநியோகம்

ஆர்.ஷபிமுன்னா

டெல்லித் தமிழ் சங்கத்தில் கபசுரக் குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதற்கான 25,000 பொட்டலங்களை தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும் அவரது மகனான ஒ.பி.எஸ்.இரவீந்திரநாத் குமாரும் அனுப்பி வைத்தனர்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் டெல்லி தமிழ் சங்கமும் இறங்கியுள்ளது. இதில் ஒன்றாக, நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் பொட்டலங்களையும் பலருக்கு வழங்க முடிவு செய்தது.

இதையடுத்து டெல்லித் தமிழ்ச் சங்கத்தினர், தமிழகத் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்திடமும், தேனி மக்களவை தொகுதியின் எம்.பியான இரவீந்திரநாத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்ற இருவரும் உடனடியாக விமானம்மூலம் தமிழகத்தில் இருந்து 25,000 கபசுரக் குடிநீர் பொட்டலங்களை டெல்லி தமிழ் சங்கத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இவை, டெல்லிவாழ் தமிழக மக்களுக்கும், தமிழக முன்களப் பணியாளர்களுக்கும் டெல்லி தமிழ் சங்கம் விநியோகித்தது. இதற்காக இருவருக்கும் டெல்லி வாழ் தமிழர்கள் சார்பிலும், டெல்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வீ. ரெங்கநாதன் ஐ.பி.எஸ் (ஓய்வு), பொதுச் செயலாளர் என். கண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது-.

          
SCROLL FOR NEXT