மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்காமல் பதவி விலகிய 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இன்று பாஜகவில் இணைகின்றனர். அவர்கள் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது. பிரேன் சிங் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில், 3 பாஜக எம்எல்ஏ-க்கள் காங்கிரஸில் சேர்ந்தனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோர் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.
ஆனால் தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். பின்னர் தங்கள் முடிவை திரும்ப பெறுவதாகவும் அரசுக்கு மறுபடியும் ஆதரவு அளிப்பதாகவும் கூறினர்
எனினும் பாஜக அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என காங்கிரஸ் கூறி வருகிறது. பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.
இதன்படி, அம்மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரேன் சிங் பெரும்பான்மையை நிரூபித்தார்.
வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், 8 எம்.எல்.ஏ.க்கள் அவரது உத்தரவை மீறி சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்தனர்.
அவர்களில் ஆறு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்தநிலையில் அந்த எம்எல்ஏக்கள் 6 பேரும் பாஜகவில் சேரவுள்ளனர். இதற்காக அவர்களை முதல்வர் பிரேன் சிங் டெல்லி அழைத்து வந்துள்ளார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர்கள் கட்சியில் சேரவுள்ளனர். பின்னர் தங்கள் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் அவர்கள் மீண்டும் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.