மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத்திருத்தச் சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் உல்ள ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்திய ஏராளமான முஸ்லிம்கள் பாஜகவில் நேற்று இணைந்தனர் என்று அந்தகட்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பாஜக மாநிலத் தலைவர் ஆதேஷ் குப்தா, தேசிய துணைத்தலைவரும் டெல்லி பொறுப்பாளருமான ஷியாம் ஜாஜு ஆகியோர் முன்னிலையில் ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் பாஜகவில் இணைந்தனர்.
குறிப்பாக ஷாகீன் பாக் போராட்டத்தில் தீவிரமான இருந்த சமூக செயற்பாட்டாளர் ஷாசாத் அலி உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் பலரும் நேற்று பாஜகவில் முறைப்படி தங்களை இணைத்துக்கொண்டனர்.
இதுகுறித்து பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில் “ முஸ்லிம்கள் மீது பாஜக எந்தவிதமான வேறுபாட்டையும் காட்டவில்லை, அவர்களைப் வளர்ச்சியின் மையத்துக்குள் கொண்டுவரத்தான் அரசு முயல்கிறது என்பதை உணர்ந்து, நூற்றுக்கணக்கான முஸ்லிம் சகோதரர்கள், சகோதரிகள் பாஜகவில் இணைந்திருப்பது புதிய உற்சாகத்தை தருகிறது.
முத்தலாக் சட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்தபின், பாஜகவில் இணைந்த முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் நம்பிக்கை வைத்துள்ளதைத்தான் இது காட்டுகிறது.” எனத் தெரிவித்தார்.
பாஜக டெல்லி பொறுப்பாளர் ஷியாம் ஜாஜு கூறுகையில் “ யாரும் தேசியஅடையாளத்தை நிரூபிக்கத் தேவையில்லை என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துவிட்டார்கள். சிஏஏ குறித்து பேச்சு எழுந்தபோது, சில அரசியல் கட்சிகள் முஸ்லிம் மக்களை தவறான பாதைக்குதிருப்பினர். ஆனால், அவர்கள் தற்போது எதையும் நிரூபிக்கத் ேதவையில்லை என்பதை உணர்ந்விட்டனர்.
யாருடைய வாக்களிக்கும் உரிமையும், குடியுரிமையும் பறிக்கப்படாது. பாஜக மூலம்தான் நீதி பெற முடியும் என்பதை உணர்ந்தபின், ஷாகீன் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமன முஸ்லிம்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக இருந்த ஷாசாத் அலி, மருத்துவர் மீரான், ஆம்ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகி தபாசம் ஹூசைன் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் சகோதரர்கள், சகோதரிகள் பாஜகவில் இணைந்தனர் என்று பாஜக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் ஷாசாத் அலி கூறுகையில் “ பாஜக நம்முடைய எதிரி என எங்கள் சமூகத்தினர் நினைத்திருப்து தவறு எனத் தெரிவிக்கவே நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன். பல ஆண்டுகளாக பாஜக முஸ்லிம்களுக்கு எதிரி என மற்ற கட்சிகள் பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தன.
பாஜக எதிரியா அல்லது நண்பரா எனத் தெரிந்து கொள்ளவே பாஜக பக்கம் செல்ல நினைத்தேன். ஆனால் எனக்கு பாஜகவிலும, அந்த தலைவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிஏஏ சட்டத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பாஜக தலைவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பேசுவேன்” எனத் தெரிவித்தார்.