ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய தலைப்பாகை அணிந்து பங்கேற்பது வழக்கம். அதேபோல, நேற்றைய சுதந்திர தின விழாவின்போதும் காவி மற்றும் கிரீம் நிறத்தில் தலைப்பாகை அணிந்தபடி தேசியக் கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார்.
அரைக்கை குர்தாவும் இறுக்கமான சுரிதாரும், உடைக்குப் பொருத்தமாக வெள்ளை நிறத்தில் காவி நிற பார்டர் போட்ட நீண்ட துண்டையும் அவர் அணிந்திருந்தார். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அந்த துண்டையே மூக்கையும் வாயையும் மறைக்கும் முகக் கவசம்போல சுற்றியிருந்தார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் வட மாநிலங்களில் அணியப்படும் பாரம்பரிய முறையிலான தலைப்பாகையைத்தான் பிரதமர் அணிந்து வருவார். அந்த தலைப்பாகையின் வண்ணங்கள் ஊடகங்களில் பேசு பொருளாகிவிடும்.
2014-ம் ஆண்டில் முதல்முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, தேசியக் கொடி ஏற்றியபோது அடர் சிவப்பு நிற தலைப்பாகையையும் 2015-ம் ஆண்டில் பல வண்ண குறுக்கு கோடுகள் கொண்ட மஞ்சள் நிற தலைப்பாகையையும் 2016-ம் ஆண்டில் பிங்க் மற்றும் மஞ்சள் தலைப்பாகையையும் பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்தார்.
2017-ல் தங்க நிறக் கோடுகள் கொண்ட மஞ்சளும் சிவப்பும் கலந்த நிற தலைப்பாகையையும், 2018-ல் காவி நிற தலைப்பாகையையும் அணிந்திருந்தார். கடந்த ஆண்டு பல நிறங்களைக் கொண்ட தலைப்பாகையை அணிந்திருந்தார்.