பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, ஐ.நா பாதுகாப்பு சபையின் குழுவின் நிரந்தரமில்லா உறுப்பினராக இந்தியா தேர்வானதற்கு வாழ்த்து கூறினார்.
நேபாள வரைபடத்தில் இந்திய பகுதிகளை சேர்த்தது தொடர்பாக இருநாடுகளிடையே ஏற்கெனவே அதிருப்தி உள்ளது. கடவுள் ராமர் பிறந்த இடம் அயோத்தி அல்ல நேபாளத்தில் உள்ளது என நேபாளப் பிரதமர் கே பி சர்மா ஒலி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேபாளப் பிரதமர் கே பி சர்மா ஒலியிடம் இருந்து பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசுக்கும் இந்திய மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த நேபாள பிரதமர், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லா உறுப்பினராக இந்தியா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்பை மட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளிலும் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தலைவர்கள் பரஸ்பர ஆதரவைத் தெரிவித்தனர். இது தொடர்பாக நேபாளத்திற்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என்று பிரதமர் கூறினார்.
நேபாள பிரதமரின் தொலைபேசி அழைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியாவும், நேபாளமும் பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டு மற்றும் கலாச்சார ஒற்றுமைகளை நினைவுகூர்ந்தார்.