ஜம்மு காஷ்மீரின் திரிகுதா மலைகளில் உள்ள குகைப் புனிதஸ்தலமான வைஷ்ணோ தேவி குகைக் கோயிலுக்கான புனித யாத்திரை நாளை ஞாயிறு முதல் அனுமதிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தப் புகழ்பெற்ற கோயிலின் யாத்திரைகள் 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த்து.
யாத்திரை மார்ச் 18ம் தேதி நிறுத்தப்பட்டது. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் குமார் நாளை முதல் யாத்திரை தொடங்குவதாக அறிவித்தார், முதல் வாரத்தில் தினமும் 2,000 யாத்திரிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள். இதில் 1,900 பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் 100 பேர் வெளி மாநில யாத்திரிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதன் பிறகு சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்றார் ரமேஷ் குமார்.
“ஆன்லைன் பதிவு செய்து கொள்ள வேண்டும், யாத்திரை பதிவு இடத்தில் கூட்டம் சேரக்கூடாது என்பதற்காகவே இந்த வசதி. யாத்திரிகர்கள் ஆரோக்கிய சேது ஆப்-ஐ தங்கள் மொபைல் போனில் வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் அவசியம், வெப்பமானி மூலம் அவர்கள் உடல் நிலை பரிசோதிக்கபட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், கருத்தரித்த பெண்கள், 60 வயதுக்கும் கூடுதலானவர்கள் ஆகியோர் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோயிலுக்கான வழக்கமான பாதையான காட்ராவிலிருந்து பவனுக்கு பங்கங்கா, ஆத்குவாரி, சஞ்சிச்சட் வழி பயன்படுத்தப்படும், அதே போல் வரும் போது ஹிம்கோடி-தாரகோட் பாதை பயன்படுத்தப்படும்.
ஜம்மு காஷ்மீருக்கு வெளியேயிருந்து வரும் யாத்திரிகர்களின் கோவிட் நெகெட்டிவ் அறிக்கை சோதிக்கப்படும். அதே போல் சிகப்பு மண்டலத்திலிருந்து வரும் யாத்திரிகர்களுக்கு யாத்ரா நுழைவு பகுதியில் ஹெலிபேடில் உடல் சோதனை செய்யப்படும்.
கோவிட் 19 நெகெட்டிவ் காட்டப்படுபவர்களுக்கே அனுமதி. யாத்திரிகர்களின் வசதிக்காக பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், பயணிகள் ரோப்வே, ஹெலிகாப்டர் சேவைகள் சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகளை தீவிரமாகக் கடைப்பிடித்து இயக்கப்படும்.
காட்ராவிலிருந்து பவன் வரைக்கும் பெரிய அளவில் தூய்மைப்பணிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.” இவ்வாறு தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் குமார் தெரிவித்தார்.
சுமார் 5 மாதகால இடைவேளைக்குப் பிறகு வைஷ்ணோ தேவி புனித யாத்திரைக்கு கிடைத்துள்ள அனுமதி அங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.