லடாக் எல்லைப் பகுதிகளில் சீன வீரர்களை இந்தோ - திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) வீரர்கள் விரட்டி அடித்துள்ளனர்.
கடந்த 1962 சீன போருக்குப் பிறகு இந்திய, சீன எல்லை பாதுகாப்புக்காக இந்தோ - திபெத் எல்லை காவல் படை தொடங்கப்பட்டது. லடாக்கின் காராகோரத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை சுமார் 3,488 கி.மீ. தொலைவை இந்த படை வீரர்கள் காவல் காத்து வருகின்றனர்.
சுதந்திர தின விழாவில், இந்தோ - திபெத் காவல் படையை சேர்ந்த 21 வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. கடந்த மே, ஜூன் மாதங்களில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் சீன வீரர்களை தீரமுடன் எதிர்த்து போரிட்டதற்காக அவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து இந்தோ - திபெத் காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வான் பள்ளத்தாக்கு மட்டுமன்றி லடாக் எல்லையின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை முன்னேற விடாமல் இந்தோ - திபெத் காவல் படை வீரர்கள் தடுத்து விரட்டியடித்தனர்.
எல்லையில் சீன வீரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். சில இடங் களில் 17 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை சண்டை நீடித்தது.
எல்லையில் சீன வீரர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி ஐடிபிபி வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சில பகுதிகளில் சீன வீரர்களுடன் நேருக்கு நேர் போரிட்டனர். இமயமலை பகுதிகளில் போரிட ஐடிபிபி வீரர்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். தங்களது போர் திறனால் இந்திய மண்ணை வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீனாவுடனான சண்டை யில் காயமடைந்த இந்திய வீரர் களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதன் காரணமாக மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.
அப்போது சீன தரப்பில் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இந்திய தரப்பில் ராணுவத்தின் பிஹார் படைப் பிரிவை சேர்ந்த 50 வீரர்கள் மட்டுமே இருந்தனர். எனினும் இந்திய வீரர்கள், சீன வீரர்களுடன் தீரமுடன் மோதினர். இதில் தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்துள்ளன.
இந்த மோதல்கள் தவிர லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறியிருப்பது ஐடிபிபி அறிக்கை மூலம் இப்போது தெரிய வந்துள்ளது.