இந்தியா

எஸ்டிபிஐ, பிடிஎஃப் கட்சிகளுக்கு தடை?- கர்நாடக அமைச்சரவை 20-ம் தேதி முடிவு

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் எஸ்டிபிஐ, பிடிஎஃப் ஆகிய கட்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து வரும் 20-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அம்மாநில கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷிமோகாவில் செய்தி யாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

கர்நாடகாவில் கடந்த சில ஆண்டு களாக எஸ்டிபிஐ, பிடிஎஃப் ஆகிய இரு கட்சிகளும் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதும் முந்தைய வழக்குகளில் தெரியவந்துள்ளது.

பொதுவான முஸ்லிம் இளைஞர் களுக்கும் மத உணர்வைத் தூண்டி, வன்முறை பாதைக்கு இழுத்துச் செல் கின்றனர். இந்தக் கட்சியினர் வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பெங் களூருவில் வன்முறையில் ஈடுபட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீஸார் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

பொய் பரப்புரை

கர்நாடகாவில் எஸ்டிபிஐ, பிடிஎஃப் உள்ளிட்ட அமைப்புகளை தடை செய் வது குறித்து ஏற்கெனவே முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் விவாதித்துள் ளோம். உடனடியாக தடை விதிப்பது குறித்து வரும் 20-ம் தேதி நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். கலவரத்துக்கு காரணமான பதிவை இட்ட நவீன் பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால், காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தொடர்ந்து அவரை பாஜகவை சேர்ந்தவர் என பொய் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்களை வலுவாக கண்டிக்கும் அளவுக்குகூட காங்கிரஸ் தைரியம் இல்லாமல் இருக்கிறது.

இவ்வாறு தெரிவித்தார்.

நீதிமன்றத்தை நாடுவோம்

இதுகுறித்து எஸ்டிபிஐ மாநில தலைவர் இலியாஸ் முகமதுவிடம் கேட்டபோது, ‘‘பெங்களூரு கலவரத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் அமைப்பில் இல்லாதவர்களை, எங்களது நிர்வாகி என போலீஸார் பொய்யாக வழக்கில் சேர்த்துள்ளனர். நாங்கள் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடாத நிலையில், எங்கள் கட்சிக்கு தடை விதிக்க முடியாது. அதையும் மீறி தடை விதித்தால் நீதிமன்றத்தை நாடுவோம்’’ என்றார்.

          
SCROLL FOR NEXT