பிரேன் சிங் - கோப்புப் படம் 
இந்தியா

மணிப்பூர் பாஜக அரசு தப்புமா?- இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

செய்திப்பிரிவு

மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது. பிரேன் சிங் முதல்வராக உள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில், 3 பாஜக எம்எல்ஏ-க்கள் காங்கிரஸில் சேர்ந்தனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோர் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

ஆனால் தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். பின்னர் தங்கள் முடிவை திரும்ப பெறுவதாகவும் அரசுக்கு மறுபடியும் ஆதரவு அளிப்பதாகவும் கூறினர்

எனினும் பாஜக அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என காங்கிரஸ் கூறி வருகிறது. பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக சபாநாயகரிடம் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்தது. சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி மணிப்பூர் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் அனைவரும் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கொறடா உத்தரவுபடி வாக்களிக்க வேண்டும் எனவும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சட்டப்பேரவை கொறடாக்கள் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளனர். சட்டப்பேரவை பலப் பரீட்சை முடிவுகள் இன்று தெரிய வரும்.

SCROLL FOR NEXT