இந்திய எல்லைப்பகுதியில் சீன ஆக்கிரமிப்பின் உண்மைகளைக் கூறுவதன் மூலம் பிரதமர் மோடி சத்தியாகிரஹம் இருப்பாரா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதினம் வருவதையொட்டி, ‘குப்பைகள் இல்லா தேசம்’(garbage-free India)எனும் ஒருவார இயக்கத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மக்கள் அனைவரும் குப்பைகள் இல்லா இந்தியா உருவாக உறுதி மொழி ஏற்றுச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக பிரமதர் அலுவலகமும் “கார்பேஜ் குவிட் இந்தியா” என்ற தலைப்பில் ட்விட் செய்திருந்தது.
பிரதமர் அலுவலகம் ட்விட் செய்ததற்கு பதில் அளித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட் செய்திருந்தார்.
அதில் “ ஏன் கூடாது. நாம் ஒரு அடி முன்னே சென்று, தேசத்தில் அதிகரித்துவரும் பொய்களின் குப்பைகளையும் சுத்தம் செய்யலாமே. சீனாவின் ஆக்கிரமிப்புகளின் உண்மைகளை கூறுவதற்காக பிரதமர் சத்தியாகிரஹம் இருப்பாரா? “ எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
ராகுல் காந்தி மற்றொரு ட்வீட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அறிக்கை நீக்கப்பட்டிருந்தது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். கடந்த மே மாதம் மத்திய பாதுகாப்புத்துறை அளித்த அறிக்கையில் சீனாவின் அத்துமீறல் இருந்ததை குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த அறிக்கை தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானவுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது இணையதளத்திலிருந்து அந்த அறிக்கையை நேற்று நீக்கியது.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில் “ இது ஒன்றும் தற்செயலான நிகழ்வு அல்ல. ஆனால், ஜனநாயகத்துக்கு விரோதமான பரிசோதனை.
எப்போதெல்லாம் தேசம் உணர்ச்சிவசப்படுமோ அப்போது கோப்புகள், ஆவணங்கள் மறைந்துவிடும். அது மல்லையா அல்லது ரஃபேல் போர் விமானம், அல்லது நிரவ் மோடி, மெகுல் சோக்சி மீதான வழக்குகளும் அப்படித்தான்” எனத் தெரிவித்துள்ளார்.