இந்தியா

கோழிக்கோடு விமான  விபத்து: பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி பேச்சு

செய்திப்பிரிவு

கோழிக்கோடு விமான விபத்து நடந்த தகவல் அறிந்து பிரதமர் மோடி கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசினார்.

துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் இன்று இரவு வந்தது.

அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் விமானம் தரை இறங்கும் போது விபத்து ஏற்பட்டது. இரவு 7:38 மணியளவில் விபத்து ஏற்பட்டு உள்ளது.

மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியபடி விலகிச் சென்று மோதியது. இதில் முன்பக்கம் விபத்துக்குள்ளானது. மேலும் லேசான அளவில் தீ பிடித்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர் மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர். விமானி பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பேரிடர் மீட்பு படையினரை உடனடியாக மீட்பு பணியில் ஈடுபடுமாறு பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விமான விபத்து நடந்த தகவல் அறிந்து பிரதமர் மோடி கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்களை விபத்து பகுதிக்கு அனுப்பியுள்ளதாகவும், மீட்ப பணிகள் முழு அளவில் நடந்து வருவதாகவும் பினராயி விஜயன் பிரதமரிடம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT