ஸ்வப்னா சுரேஷ் 
இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு ஸ்வப்னா வாக்குமூலத்தில் முக்கியத் தகவல்கள்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் நாயர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தலில் தீவிரவாத தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தால் இவ்வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்ஐஏ தவிர, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத் துறையும் இந்த முறைகேடு குறித்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில் அவரது நிதி விவரங்கள் மற்றும் கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களின் விவரம் இடம்பெற்றுள்ளதாக சுங்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கில் இதுவரை கண்டறியப்பட்ட உண்மைகள் மற்றும் அனுமானங்களை நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் சுங்கத் துறை சமர்ப்பித்துள்ளது. வழக்கில் ஸ்வப்னா சுரேஷும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க முயன்றார். என்றாலும் இது ஒரு வழக்கமான நடைமுறை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான, மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னாவை சேர்ந்த வரிக்கோடன் அப்துல் ஹமீது நேற்று முன்தினம் சுங்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார். தடை செய்யப்பட்ட பொருட்களை தூதரக வழியில் அனுப்பினால் அது பரிசோதனை நடைமுறைகளை கடந்து வருமா என்பதை அறிவதற்காக சோதனை அடிப்படையில் ஒரு பார்சலை இவர் அனுப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT