இந்தியா

அயோத்தியில் அமையும் ராமர் கோயில் எப்படி இருக்கும்?-  படங்கள் வெளியீடு

செய்திப்பிரிவு

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறும் நிலையில் கோயில் குறித்த படங்களை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நாளை பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

கரோனா தொற்று சூழல் காரணமாக நிகழ்ச்சியில் குறைவான நபர்களே பங்கேற்க உள்ளனர். இருப்பினும் விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் பூமி பூஜை விழா மேடையில் 4 மொத்தம் இடம் பெறுவர். பிரதமர் நரேந்தி மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம் பெறுவர். மொத்தம் 175 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியில் வசிப்பவர்கள்.

வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி, கேட்பாரற்ற 10 ஆயிரம் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தியவரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான முகமது ஷெரீப் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்றோர் கரோனா தொற்று பிரச்சினை காரணமாக நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்கவில்லை.

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறும் நிலையில் கோயில் குறித்த படங்களை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT