ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
உலகில் இதுவரை நடந்திராத ஆன்லைன் ஹேக்கத்தான் இறுதிப் போட்டி இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்காவது ஆண்டாக இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த ஆண்டு போட்டியில் 4.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-க்காக, மாணவர்களின் சிந்தனைகளைத் தேர்வு செய்வதற்கான கல்லூரிகள் அளவிலான முதற்கட்டப் பணி, கடந்த ஜனவரி மாதமே நடத்தப்பட்டு, கல்லூரி அளவில் வெற்றிபெற்ற அணிகள் மட்டுமே, தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப்போட்டியில் உரையாற்றிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது:
‘‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள், நாடு எதிர்நோக்கும் சவால்களைக் களைவதற்கான, புதிய மற்றும் இடையூறு விளைவிக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப புதுமைகளை அடையாளம் காண்பதற்கான ஒரு தனித்தன்மை வாய்ந்த முன்முயற்சி. இந்த போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், 2-ம் இடம் பெறுபவருக்கு 75 ஆயிரம் ரூபாயும், 3-ம் இடம் பெறுபவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசு வழங்கப்படும். ’’ எனக் கூறினார்.