ஈத் பண்டிகையின் போது ஏன் விலங்குகளை பலி கொடுப்பதற்குப் பதிலாக குழந்தைகளைக் கொடுங்கள் என்று உத்தரப் பிரதேச மாநில லோனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கிஷோர் குர்ஜார் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.
மேலும் இறைச்சி கரோனா வைரஸைப் பரப்பும் எனவே அப்பாவி விலங்குகளை பலி கொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று அவர் பேசியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் எம்.எல்.ஏ. கிஷோர் குர்ஜார் கூறியதாவது:
ஈத் பண்டிகையை முன்னிட்டு பலி கொடுக்க விரும்புபவர்கள் தங்கள் குழந்தைகளை தியாகம் செய்யட்டும். லோனி பகுதியில் இறைச்சி உண்ணுவதையோ மது அருந்துவதையோ நான் அனுமதிக்க மாட்டேன். ஏனெனில் இறைச்சி கரோனா வைரஸை பரப்பக் கூடியது.
அப்பாவி விலங்குகளை பலி கொடுக்க அனுமதிக்க மாட்டோம். கரோனா கால கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.
கோயில்களில் பிரார்த்தனைகளுக்கு, நமாஸுக்கு கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதே போல் ஈத் பண்டிகையை முன்னிட்டு விலங்குகளை பலி கொடுக்கவும் கூடாது.
அந்தக் காலத்தில் சனாதன தர்மத்திலும் விலங்குகள் பலி கொடுக்கப்பட்டன. ஆனால் இப்போது தேங்காய்தான் நிவேதனமாக வைக்கப்படுகிறது. எனவே முஸ்லிம் சகோதரர்கள் விலங்குகளை பலியிட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். லோனியில் இது நடைபெறுவதை அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.