திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 5-ம் தேதி ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு வந்த சரக்குப் பெட்டிகளை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அப்போது தங்கக் கடத்தல் அம்பலத்துக்கு வந்தது. இந்த சோதனையில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் சிக்கியது.
இந்தக் கடத்தலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பி.எஸ். சரித், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணியாற்றிவந்த ஸ்வப்னா சுரேஷ் அவரது நண்பர் சந்தீப் நாயர் ஆகிய 3 பேரும் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) காவலில் உள்ளனர். இந்த வழக்கில் துபாயைச் சேர்ந்த ஃபைசல் பரீத் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது ஆணையை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஃபைசலுக்கு எதிராக நீல அறிவிப்பை (ப்ளூ கார்னர் நோட்டீஸ்) பிறப்பிக்குமாறு இன்டர்போலுக்கு என்ஐஏ கோரிக்கை விடுத்துள்ளது.
குற்றத்தில் தொடர்பு உடையவரின் செயல்பாடுகள் என்ன, அவர் எங்கே இருக்கிறார், அவரைப் பற்றிய அடையாளம், விவரங்கள் தொடர்பாக கூடுதல் தகவல் சேகரிப்பதற்காக, இன்டர்போல் நீல அறிவிப்பை பிறப்பிக்கும். நீல பட்டியலில் ஃபைசல் சேர்க்கப்படுவதால் இன்டர்போல் விதிகளின்படி ஃபைசல் தொடர்பான விவரங்களை ஐக்கிய அரபு அமீரகம் தெரிவிக்க வேண்டும்.