புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், அம்மாநில எல்லையில் அவ்வப்போது அந்நாட்டு ராணுவத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அத்துமீறல்கள் நடைபெறும்போது, எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினரே சீன ராணுவத்தினரை தடுத்து நிறுத்தி வருகின்றனர். அண்டை மாநிலங்களில் இருந்து நமது ராணுவ வீரர்கள் அங்கு செல்வதற்கு 2 அல்லது 3 நாட்கள் ஆகிவிடுகின்றன. இது, சீனாவுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, இந்த தொலைவைக் குறைக்கும் வகையில், அசாமில் பாயும் பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் 14.8 கி.மீ. நீளத்தில் சுரங்கச் சாலை அமைக்கும் திட்டம் சில மாதங்களுக்கு முன்பு முன்மொழியப்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அசாமின் கோஹ்பூர் பகுதி முதல் அருணாச்சலப் பிரதேச எல்லை அருகே உள்ள நுமலிஹர் பகுதி வரை சுரங்கச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த சுரங்கப் பாதை முழுக்க முழுக்க பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் அமைக்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் லூயிஸ் பெர்ஹர் நிறுவனத்துடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், இந்த சுரங்கச் சாலையை கட்டமைக்கவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.