‘‘உண்மையை தொந்தரவு செய்யலாம். ஆனால் அதனை தோற்கடிக்க முடியாது’’ என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வர் அசோக் கெலாட் சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த சச்சின் பைலட், தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார்.
முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஜெய்ப்பூரில் நேற்று காலை காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால்,சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களான 20 எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் தனது ஆதரவு எம்எல்ஏக்களை ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார். அந்த சொகுசு விடுதியில் இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 102 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது.
சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். 3 அமைச்சர்களும் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சச்சின் பைலட் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது விவரக்குறிப்பு பகுதியில் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் மாநில காங்கிரஸ் தலைவர் என்ற தனது பதவி விவரங்களை நீக்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் என்ற விவரம் மட்டுமே அவரது குறிப்பில் தற்போது உள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ‘‘உண்மையை தொந்தரவு செய்யலாம். ஆனால் அதனை தோற்கடிக்க முடியாது’’ என குறிப்பிட்டுள்ளார்.