ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை துணை முதல்வர் சச்சின் பைலட் புறக்கணித்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார்.
அங்கு துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் கெலோட்டுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.
அசோக் கெலோட்டின் நடவடிக்கையால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.
எனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது. இந்தநிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
அவருக்கு குறிப்பிட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிகிறது. சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியானது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக கொறாடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இன்றையக் கூட்டத்தில் 97 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக தெரிகிறது. எனினும் சச்சின் பைலட் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 200 எம்எல்ஏக்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள 100 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும் என்பதால் காங்கிரஸ் வட்டாரத்தில் இன்னமும் பதற்ற நிலையே காணப்படுகிறது. தங்களுக்கு 109 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.