நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தங்களுக்குச் சேர வேண்டிய தொகையினை உடனடியாக வழங்கி தாங்கள் ஏர் இந்தியா பணியை விட்டு விலக வழிவகை செய்ய வேண்டும் என்று ஏர் இந்தியா விமானிகள் சங்கம் மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வான்வழிப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள், ஏர் இந்தியா பைலட் அமைப்புக்கிடையே பேச்சு வார்த்தை நடந்தது.
இது தொடர்பாக ஏர் இந்தியா பைலட் சங்கம் கூறியிருப்பதாவது:
கூட்டத்தில் முதலில் கரோனா பெருந்தொற்று காலத்தில் அயராது பணியாற்றிய எங்களது முன்னணி பணியாளர்களை தாக்கும் போக்குக்கு கண்டனம் வெளியிட்டோம்.
இந்த சோதனைக் காலக்கட்டத்தில் ஏர்லைனின் நலன்களுக்காக முழு ஆதரவு அளிப்பதையும் உறுதி செய்தோம். அதாவது ஏர் இந்தியாவின் அனைத்து ஊழியர்களும் சம்பளக்குறைப்பில் பங்கேற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். சம்பளமில்லாத கட்டாய விடுப்பு முறையும் ஏர் இந்தியாவின் அனைத்து ஊழியர்களுக்கும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். மேலும் சந்தை நிலவரங்களின் படி அனைத்தும் முடிவு செய்யப்படவேண்டும்.
மேற்கூறியது சாத்தியமில்லை எனில், இதுவரை நிலுவையில் உள்ள பாக்கித் தொகையில் எங்களுக்குச் சேர வேண்டியதில் 25% தொகையினை உடனடியாக வழங்கி உடனடியாக பைலட்கள் ஏர் இந்தியா பணியிலிருந்து விலக வழிவகை செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்தோம்.
சம்பளக்குறைப்பு என்பது சந்தை நிலவரங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டதாக இருக்க வேண்டும், தன்னிச்சையான சம்பளக்குறைப்பை ஏற்க மாட்டோம்.
மேலும் எங்களை இந்த மாதிரியான காலக்கட்டங்களில் எங்களை போராட்டம், வேலை நிறுத்தம் போன்றவற்றுக்கு தள்ளி விட வேண்டாம். சம்பளக்குறைப்பு அனைத்து ஊழியர்களுக்குமானதாக சந்தை நிலவரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கை.
என்று மத்திய அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தின் தொடர்ச்சி ஜூலை 13ம் தேதி நடைபெறும்.