இந்தியா

7/11 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் செப்.30-ல் தண்டனை அறிவிப்பு

பிடிஐ

மும்பையில் 2006-ம் ஆண்டு புறநகர் ரயில்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்ட 12 பேருக்கான தண்டனை விவரம் வரும் 30-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

இதில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

மரண வியாபாரிகள்

குற்றவாளிகள் 12 பேரையும் மரண வியாபாரிகள் என்று வர்ணித்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ராஜா தாக்கரே, அதில் முக்கிய குற்றவாளிகளான 8 பேருக்கும் எவ்வித கருணையும் காட்டாமல் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் புறநகர் ரயில்களில் குண்டு வெடித்த வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் 9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10-ம் தேதி தீர்ப்பளித்தது. இதில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

கமல் அகமது அன்சாரி (37), தன்வீர் அகமது அன்சாரி (37), முகமது பைசல் ஷேக் (36), எஹ்தே ஷாம் சித்திகி (30), முகமது மஜித் ஷபி (32), ஷேக் ஆலம் ஷேக் (41), முகமது சாஜித் அன்சாரி (34), முஸம்மில் ஷேக் (27), சொஹைல் மெஹ்மூத் ஷேக் (43), ஜமீர் அகமது ஷேக் (36), நவீத் ஹுசைன் கான் (30), ஆசிப் கான் (38) ஆகிய 12 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள ஆசம் சிமா மற்றும் 11 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் அனைவருமே தடை செய்யப்பட்ட சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள்.

188 பேர் பலி

மும்பையை அதிரவைத்த இந்த பயங்கர சம்பவம் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. மும்பை புறநகர் ரயில்களில் முதல் வகுப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டி ருந்த ஆர்டிஎக்ஸ் ரக குண்டுகள் வெடித்ததில் 188 பேர் உயிரிழந்தனர். 829 பேர் காயம் அடைந்தனர்.

மாதுங்கா ரோடு, மாஹிம், பாந்த்ரா, கர் ரோடு, ஜோகேஷ்வரி, போரிவிலி, மீரா ரோடு ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நேரத்தில் மாலை 6.23 மணிக்கு தொடங்கி 10 நிமிட இடைவெளியில் 7 ரயில்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிர மாநில திவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

8 ஆண்டு காலம் நீடித்த விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ல் முடிவுக்கு வந்தது வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் 2008-ல் தடை விதித்தது. 2010-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி உச்ச நீதிமன்றம் தடையை விலக்கியது. அதன் பிறகு சாட்சிகள் விசாரணை தொடங்கப்பட்டது.

2006-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி மற்றும், அக்டோபர் 3-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 13 பேரை தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களில் 11 பேர் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பு உள்ளதாக முதலில் தெரிவித்து பின்னர் மறுத்தனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், கைதான 13 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

8 ஆண்டு நீடித்த விசாரணையில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள், 5 ஐஏஎஸ் அதிகாரிகள், 18 டாக்டர்கள் உட்பட 192 சாட்சிகளிடம் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் 51 சாட்சிகளிடம் குறுக்குவிசாரணை நடத்தினார். சாட்சிகள் கொடுத்த வாக்குமூலம் சுமார் 5,500 பக்கங்கள் இருந்தன. தீவிர விசாரணைக்குப் பிறகு 12 பேர் குற்றவாளிகள் என கடந்த 10-ம் தேதி நீதிமன்றம் உறுதி செய்தது. அப்துல் வாஹித் சாஹிப் என்பவர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்த வாதம் நடைபெற்றது. இப்போது குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிக்கப்படும் தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT