இந்தியா

ஆகஸ்டில் சசிகலா விடுதலை?- சமூக ஊடகத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

செய்திப்பிரிவு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழிசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடியும் 2021-ம்ஆண்டுக்கு முன்பாகவே நன்னடத்தை விதியின் கீழ் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன் ‘’சசிகலா (கைதி எண் 9234) எப்போது விடுதலை செய்யப்படுவார்?’’ எனதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.இதற்கு கர்நாடக சிறைத்துறை, “சசிகலா விடுதலை செய்யப்படுவதில் பல தரப்பட்ட குழப்பங்கள் இருப்பதால், வெளியே வரும் தேதியை எங்களால் துல்லியமாக தெரிவிக்க முடியாது’’ என பதிலளித்தது.

இதற்கிடையே, நேற்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ‘சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 14-ம்தேதி ச‌சிகலா விடுதலை செய்யப்படுவார்’ என தகவல்கள் பரவின. டெல்லியில் இருக்கும் பாஜக நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி ட்விட்டரில் இதே தகவலை பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சசிகலாவின்விடுதலை தேதி தொடர்பான தகவல் தவறானது. சிறைத்துறையில் அந்த மாதிரியான பேச்சுவார்த்தையோ, நடவடிக்கையோ எதுவும்நடைபெறவில்லை’’ என்றனர்.

SCROLL FOR NEXT