இந்தியா

லடாக் மோதல் எதிரொலி; சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ரத்து:  மகாராஷ்டிர அரசு முடிவு

செய்திப்பிரிவு

லடாக் மோதலை தொடர்ந்து சீன நிறுவனங்களுடனான முதலீட்டு திட்டங்களை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது.

சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதத் தொடக்கத்தில் நடை பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்றும், அங்கிருந்து இந்திய ராணுவப் படை வெளியேற வேண்டும் எனவும் கூறியது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்குள் சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் ராணுவ வீரர்களை அங்கு குவித்ததால் இந்திய – சீன எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியது.

இரு தரப்பைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சீன ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறும்போது, இந்திய ராணுவத்தினரை இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் திடீரென தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு இந்தியா சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த பயங்கர மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
சீனா ராணுவத்தின் அட்டூழியத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மேக்னடிக் மகாராஷ்டிரா 2.0 என்ற பெயரி முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த வாரம் நடந்தது. காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்த மாநாட்டில் சீனா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் லடாக் மோதலை தொடர்ந்து சீன நிறுவனங்களுடனான முதலீட்டு திட்டங்களை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறுகையில் ‘‘புனே உள்ளிட்ட இடங்களில் ஹெங்லி இன்ஜினியரிங் திட்டத்தை ரூ.250 கோடிக்கும், கிரேட் வால் மோட்டார்சுடன் ரூ.3,770 கோடிக்கும், பிஎம்ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி திட்டத்தை ரூ.1,000 கோடிக்கும் செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. மொத்தம் 3 சீன நிறுவனங்களுடனான ஒப்பந்த மதிப்பு 5020 கோடி ரூபாய் ஆகும். இதனை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT