இந்தியா

ஞாயிறன்று அரிதான ‘நெருப்பு வளைய’ சூரிய கிரகணம்

ஏஎன்ஐ

நெருப்பு வளையம் என்று பிரபலமாக அறியப்படும் சூரியகிரகணம் ஞாயிறன்று (21-6-20) ஏற்படுகிறது.

ஜூன் 21ல் நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால், சூரியன் வளையம் போன்று தோன்றும். இது 'வளைய சூரிய கிரகணம்'அல்லது ‘நெருப்பு வளையம்’ என அழைக்கப்படுகிறது. இது காலை 10:22 முதல் பகல் 1:32 மணி வரை நீடிக்கிறது.

மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் தெரியும். ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் 34 சதவீதம் தெரியும்.

அடுத்த சூரிய கிரகணம் 2020 டிச., 14ல் தோன்றும். வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி, சூரிய கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் கோடைக்கால கதிர்மண்டலத் திருப்புமுகத்தில் ஏற்படுகிறது, இது புவி வடக்கு அரைகோளத்தில் நீண்ட பகல் நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும்போது பூமியின் மேற்பரப்பில் நிழல் விழும். சூரியனை நிலவு ஒரு குறிப்பிட்ட மணித்துளிகள் முழுவதும் மறைக்கும். இது சில இடங்களில் முழு சூரியகிரகணமாகவும் சில இடங்களில் பகுதி கிரகணமாகவும் தெரியும்.

நாளைய சூரிய கிரகணத்தின் போது நிலவின் தோற்ற அளவு சூரியனை விட கொஞ்சம் சிறியதாக இருக்கும் போது சூரியனின் மையப்பகுதி முழுதையும் அது மறைக்கும் போது சூரியனின் மேல் பகுதி நெருப்பு வளையம் போல் தோன்றும். ஒரு சிறிய நேரமே இந்தக் காட்சி இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூரிய கிரகணம் கரோனா வைரசை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய வானியல் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் கல்விக்குழு தலைவர் அனிகெட் சூலே கூறும்போது, ‘சூரிய கிரகணம் என்பது ஒரு நிலவு சூரியனை மறைக்கும் ஒரு நிகழ்வு. சூரிய கிரகணங்களுக்கும் பூமியில் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, கிரகணம் நுண்ணுயிரிகளை பாதிக்காது. அதே போல் அந்தத் தருணத்தில் உணவு உட்கொள்வதால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை. கிரகணத்தின் போது சூரியனிலிருந்து எந்த ஒரு புதிரான கதிர்களும் வெளியே வருவதில்லை’ என்றார்.

SCROLL FOR NEXT